Skip to main content

அறுவை சிகிச்சை | தி. ஜ. ரங்கநாதன்

முதல் சிறைவாசத்தில் இரண்டு ஆண்டுகள் கழிந்தன. காந்திக்குக் குடல் அநுபந்த நோய் வந்தது. வயிற்றில் தாங்கமுடியாத வலி ஏற்பட்டது.
அதைக் கண்டு சிறையின் மேல் அதிகாரி பயந்தார். தமது காரிலே காந்தியை ஏற்றிக் கொண்டார். சிறைக்கு வெளியே புனா நகரில் ஸாஸூன் ஆஸ்பத்திரி இருக்கிறது. அவரை அங்கே கொண்டுபோய்விட்டார்.
கர்னல் மேடாக் என்ற ஆங்கிலேயர் அங்கே பெரிய சர்ஜன். உடனே அறுவை சிகிச்சை செய்யவேண்டும். இல்லாவிட்டால் நோய் கடுமையாகிவிடும்என்று அவர் சொன்னார்.
காந்தி இணங்கினார்.
"உங்கள் சொந்த டாக்டர்கள் இருப்பார்கள் அவர்களுக்குச் சொல்லியனுப்ப வேண்டுமா?" என்று அதிகாரிகள் அவரைக் கேட்டார்கள்.
"பம்பாயில் டாக்டர் தலால் என்பவர் இருக்கிறார்; பரோடாவில் டாக்டர் ஜீவராஜ் மேத்தா என்பவர் இருக்கிறார். இருவரையும் வரவழையுங்கள்'' என்றார் காந்தி.
காந்தி தெரிவித்த டாக்டர்களுக்கு அப்படியே செய்தி அனுப்பினார்கள். ஆனால், காந்தியின் நாடித்துடிப்பு மோசமாயிற்று. காய்ச்சல் கடுமையாயிற்று. உடனே அறுவைச் சிகிச்சை செய்யவேண்டும்; இல்லாவிட்டால் காந்தியின் உயிருக்கே ஆபத்து என்னும் நிலை தோன்றியது.
நோய்ப்பகுதியைக் கத்தியால் அறுப்பார்கள் - இதுதான் அறுவைச் சிகிச்சை. எல்லா டாக்டர்களும் இதைச் செய்யமுடியாது; நிபுணர்களே செய்ய முடியும்.
சிறிது பிசகினால் அபாயம். அறுவை நன்றாய் நடந்திருக்கலாம்; அப்போதும் உயிர் பிழைக்காமல் போகலாம். "நான் சம்மதிக்கிறேன்" என்று நோயாளி எழுதிக் கொடுக்க வேண்டும். அப்புறந்தான் அறுவையை டாக்டர் செய்வார்.
காந்தியோ பெரிய தலைவர்; மக்களின் உள்ளத்தைக் கவர்ந்தவர். ஆங்கிலேயரோ சர்க்காரை நடத்துகிறவர்கள். ஆங்கில டாக்டர் இந்த அறுவையைச் செய்யலாமா?
"நன்றாய்ச் செய்யலாம். ஆங்கில டாக்டரிடம் எனக்கு நம்பிக்கை உண்டு. அவர் சூதுவாது புரியமாட்டார்" என்று காந்தி சொன்னார். எதிரியிடமும் நல்லெண்ணம் கொண்டவர் காந்தி.
காந்தி சம்மதித்துவிட்டார்; மக்கள் என்ன நினைப்பார்களோ? தவறாக எண்ணிக் கலகம் செய்யமாட்டார்களா? - இப்படியெல்லாம் அதிகாரிகள் பயந்தார்கள்.
ஆனால், ஆங்கில டாக்டர் மேடக் பயப்படவில்லை. அறுவையைச் செய்யத் துணிந்துவிட்டார்.
"உங்கள் நண்பர் சிலர் உடன் இருக்கட்டும். யார் யாருக்குச் சொல்லி அனுப்பலாம்" என்று அதிகாரிகள் கேட்டார்கள்.
"கனம் சீனிவாச சாஸ்திரியார், டாக்டர் பதக், என்.ஸி.கேல்கர் - இந்த மூன்று பேருக்கும் சொல்லி அனுப்புங்கள்" என்றார் காந்தி.
கனம் சாஸ்திரியார் அந்த ஊரிலேயே அப்போது இருந்தார். அவரும் நண்பர்களும் ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தார்கள்.
எழுத்து மூலம் காந்தியின் சம்மதம் வேண்டும். ஒரு கடித வாசகத்தைக் காந்தி சொன்னார்; சீனிவாச சாஸ்திரியார் அதை எழுதினார். "அறுவை செய்துகொள்ள எனக்குச் சம்மதம்'' என்று கடிதத்தில் காந்தி தெரிவித்தார்.
கடிதத்தில் காந்தி கையெழுத்திட வேண்டும் அவரிடம் நீட்டினார்கள். அப்பொழுது அவருடைய கை 'வெடவெட' என்று நடுங்கியது.
டாக்டர் மேடக்கை நோக்கிக் காந்தி சொன்னார்: "என் கை எப்படி நடுங்குகிறது, பார்த்தீர்களா? இதை நீங்கள்தாம் சரி செய்ய வேண்டும்."
"கவலை வேண்டாம். உங்கள் உடம்பில் டன் கணக்கான பலத்தை நாங்கள் ஏற்றிவிடுகிறோம்" என்றார் டாக்டர் மேடக்.
இரவு பத்து மணிக்கு மின்சார விளக்கொளியில் அறுவைச் சிகிச்சை நடந்தது.
என்ன விபரீதம்! அப்போது வானம் இடித்தது; மின்னல் வீசியது. மின்சாரம் தடைப்பட்டது. விளக்கு அணைந்தது.
'ஹரிகேன் லைட்' என்ற மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றினார்கள். அந்த வெளிச்சத்தில் அறுவையை டாக்டர் செய்து முடித்தார்.
செம்மையான சிகிச்சை; காந்தி பிழைத்தார்.

அடுத்தக் கதை: ஆஸ்பத்திரி காட்சி

Comments

Most Popular

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி

ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெ

குலாப்ஜான் காதல் | புதுமைப்பித்தன்

‘ காதலாவது உருளைக்கிழங்காவது ’ - சி . சுப்பிரமணிய பாரதி நான் ஆராய்ச்சிப் பிரியன் . அதிலும் தர்க்கரீதியாக புத்தியை வசீகரிக்கக்கூடிய ஆராய்ச்சியென்றால் , அதுதான் எனது தெய்வம் . கம்பனுடைய காவியங்கள் முதல் , நாணயச் செலாவணி , தீண்டாதார் ஆலயப் பிரவேசம் ஈறாக , எல்லாம் தர்க்க முறையில் அடைபட்டு ஒத்து இருந்தால்தான் எனது கொள்கை . இல்லாவிடில் அதற்கும் நமக்கும் வெகுதூரம் . இந்தக் காதல் விஷயத்தை நன்றாக ஆராய்ந்து கவனித்ததில் , சாதாரணமாக அல்ல , அபரிமிதமாக , காவியங்கள் , நாவல்கள் என்ற கற்பனைப் பிரதேசங்களில்தான் விளைகின்றன . இல்லாவிட்டால் அவை நமது பொருள்காட்சி சாலைகளைத் தப்பி இருக்க முடியுமா ? அகப்பொருள் இலக்கணக்காரர் கூறுவதைப் பார்த்தால் அசல் , கலப்பில்லாத பழம் பெருந்தமிழ் மக்களுடனிருந்து அவர்கள் தங்களுடைய ஏடுகளுடன் கடலால் கொள்ளப்பட்ட பொழுது , அவர்களுடன் சங்கமமாயிற்றென்று நினைக்க ஏதுவிருக்கிறது . ஆழ்ந்து யோசிக்குந்தோறும் , தர்க்க ஆராய்ச்சியை வழிபடும் எனக்கு , அதன் கூற்றுக்கள் வெகு வினோதமாகவே காணப்படுகின்றன . எனது ஆர