Skip to main content

ஆஸ்பத்திரி காட்சி | தி. ஜ. ரங்கநாதன்


ஆஸ்பத்திரியில் மிகவும் ஒழுங்காக காந்தி நடந்துகொண்டார். இது டாக்டருக்கு மகிழ்ச்சி அளித்தது; நர்ஸுக்குப் பிரியமாயிருந்தது. எல்லாரும் காந்தியிடம் அன்பு கொண்டார்கள்.
ஒரு நர்ஸ் இங்கிலீஷ்காரி. இங்கிலாந்து, ஆப்பிரிக்கா ஆகிய இரண்டு நாடுகளின் ஆஸ்பத்திரிகளிலும் பணிபுரிந்தவள்; நீண்ட கால அனுபவம் உடையவள். மிகவும் கண்டிப்பாய் நடப்பவள்.
"நோயாளிகளிடம் நல்ல பெயர் வாங்க ஆசைப்படாதே. அதற்கு ஒரு நாளும் முயற்சி செய்யாதே" இப்படித்தான் அவளுடைய டாக்டர்கள் சொல்வார்களாம். காந்திக்கு இதை எல்லாம் அவள்தான் சொன்னாள்.
மூன்று நாள்கள் சென்றன. காந்தி மீது அவள் பற்று கொண்டாள். காந்தியின் அறையை அலங்காரம் செய்தாள். பூக்களைக் கொண்டுவந்தாள்; அழகழகாய் ஜோடித்து வைத்தாள்.
"எப்படி இருக்கிறது அறை? என் கைவேலையைப் பார்த்தீர்களா?" என்று காந்தியைக் கேட்டாள்.
அங்கு இன்னொரு நர்ஸ் இருந்தாள். அவள் மிக இளம் பெண். "என் மனத்துக்கு இசைந்த முதல் நோயாளி இவர்தாம். காந்திக்குப் பணிவிடை செய்வதே ஓர் இன்பம். அது எனக்குக் கிடைத்த பாக்கியம்என்றாள். அவள் காந்தி பற்றி நல்ல அறிக்கை எழுதினாள்; அதில் அவரைப் பாராட்டியிருந்தாள்.
டாக்டர் வந்தார். "இதற்கு முன் இந்த மாதிரி அறிக்கையை நீ எழுதியதே இல்லையே!" என்று அவளைக் கேட்டார்.
"இதற்குமுன் இந்த மாதிரி நோயாளி எனக்குக் கிட்டியது இல்லையே!" என்று அவள் பதில் சொன்னாள்.
மற்ற நர்ஸுகள் அவளைக் கிண்டல் செய்தார்கள். "என்ன இது! காந்தியிடம் மிகமிகப் பிரியம் கொள்கிறாயே; வேடிக்கைதான்!" என்றார்கள்.
"ஆமாம். அவருக்குப் பணிவிடை செய்வது ஒரு பாக்கியம். அது உங்களுக்குக் கிட்டவில்லை. கிட்டினால், நீங்களும் என் போல்தான் நடப்பீர்கள்!" என்று அவள் கூறினாள்.
இதை அவளே மஹாதேவ தேசாயிடம் சொன்னாள். அவர் காந்தியின் காரியதரிசி; அதோடு துணைவருங்கூட.
வெள்ளைக்கார டாக்டர் மட்டும் என்ன அவரும் காந்தியிடம் பேரன்பு செலுத்தினார். அந்த டாக்டரை மக்களெல்லாம் பாராட்டினார்கள்; அவரைப் புகழ்ந்து கடிதம் எழுதினார்கள்; தந்தி அடித்தார்கள்.
எண்ணற்ற கடிதங்கள், தந்திகள் பறந்தன!
"இத்தனைக்கும் நான் எப்படிப் பதில் எழுதுவேன்" என்று டாக்டர் மலைத்தார்.
எல்லோருக்கும் பொதுவாய்ப் பத்திரிகையிலே எழுதிவிடுகிறேன்என்றார். அப்படியே செய்தார்.
பெரிய பெரிய தலைவர்களெல்லாம் புனா நகருக்கு ஓடி வந்தார்கள்; காந்தியைப் பார்க்கத்தான்.
காந்திக்கு ஓய்வு வேண்டும்; அவருக்குத் தொல்லை கொடுக்கக்கூடாது - இது எல்லாருக்கும் தெரியும்.
ஜயகர் வந்தார். "நான் எட்ட இருந்து தரிசனம் செய்கிறேன்" என்றார்.
ஜவஹர்லால் நேரு வந்தார். "நான் முதலிலே வந்துவிடவில்லை; எல்லாருக்கும் கடைசியிலே வந்து காண்கிறேன்" என்றார். காந்தியின் மகன் தேவதாஸிடம் இப்படி உறுதி கூறினார்.
மௌலானா சௌகத் அலி வந்தார். காந்தி பேச முயன்றார். "நீங்கள் என்னோடு பேசவே கூடாது. நான் பதில் சொல்லமாட்டேன்" என்று மௌலானா சொல்லிவிட்டார். படுக்கையைத் துழாவினார். காந்தியின் பாதத்தைப் போர்வை மூடியிருந்தது. அதை விலக்கினார். பாதத்தை முத்தமிட்டார்; விடைபெற்றார்.
சங்கர்லால் பாங்கர் வந்தார்; அவருக்குத் துயரம் நெஞ்சை அடைத்தது; கண்ணீர் பெருக்கினார்.
மோதிலால் நேரு வந்தார்; கண்டார்; விடை பெற்றார். ஆனால், போக மனம் வரவேயில்லை. ரயில் வண்டியை வேண்டுமென்றே தவறவிட்டார். மறுபடியும் காந்தியிடம் வந்தார்; இரண்டாவது முறையும் விடைபெற்றார்.
லாலா லஜபதிராய் வந்தார்; காந்தியிடம் பேச அவருக்கு மிக்க ஆசையாயிருந்தது. சிரமப்பட்டு அந்த ஆசையை அவர் அடக்கிக்கொண்டார் ஒதுங்கி ஒருபுறமாய்ப் போய் நின்றார். பிறகு அகன்றார். நகரைவிட்டுச் செல்லுமுன் மறுபடியும் வந்தார். ஏதோ சொல்ல வந்தார். பேச்சைக் கண்ணீர் தடுத்தது. கண்ணீர் பேச்சைத் தடுத்தது. இதைக் கண்டார் காந்தி. அவருக்குச் சிரிப்பு வந்தது. அவர் எப்போதும் 'ஹஹ்-ஹஹ்-ஹ' என்று வாய்விட்டுச் சிரிப்பார். இப்போது புன்சிரிப்பே மலர்ந்தது.
"லாலாஜி! இது பெரிய வேடிக்கையாய் இருக்கிறது. கலகல என்று சிரிக்க வேண்டும் போல் இருக்கிறது எனக்கு. ஆனால், இந்தக் காயம் இருக்கிறது. தையல் பிரிந்துபோகுமே! அதனால்தான் சிரிக்க முடியவில்லை'' என்றார். லாலாஜிக்கு இது களிப்பூட்டியது. அவருடைய நெஞ்சுக்கனம் குறைந்தது. வெளியே வந்தார். "நாம் இப்போது துயரப்பட வேண்டியதில்லை; மகிழவேண்டும். கருணைக்கடலான கடவுள் நமக்கு அருள் சுரந்துவிட்டார்என்று எல்லோரிடமும் சொன்னார்.
கடைசியில் ஒரு நாள் ஆங்கில டாக்டர் வந்தார். "அரசாங்கத்தார் உங்களை விடுதலை செய்துவிட்டார்கள்" என்று அறிவித்தார் காந்தி சில நிமிட நேரம் பேசாமல் இருந்தார்.
பிறகு புன்சிரிப்புடன் சொன்னார்: "அது சரி; ஆனால், இன்னும் சில நாள் வரையில் நான் உங்கள் நோயாளியும் விருந்தாளியுமாயிருக்க விரும்புகிறேன். அனுமதி தருவீர்களா?"
டாக்டர் சிரித்துக்கொண்டே கூறினார்: "ஆஹா! அப்படியே இருங்கள். என் நோயாளியான உங்களை நம்புகிறேன். நான் டாக்டர் என்ற முறையில் போடும் கட்டளைகளை மீறமாட்டீர்களே? உங்களை இங்கு தங்க வைத்துக்கொள்வதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி; திருப்தி. நீங்கள் முற்றும் குணம் அடையச் செய்கிறேன். அது என் பொறுப்பு." அப்படியே ஒரு மாத காலம் காந்தி அந்த ஆஸ்பத்திரியிலிருந்தார். நன்றாய்க் குணமானதும் விடைபெற்றுச் சென்றார்.

Comments

Most Popular

மனமும் அதன் விளக்கமும் - மனமெனும் மாயம் | பெ. தூரன்

ம னம் என்பதென்ன? அது எங்கே இருக்கிறது? கை, கால், கண், இதயம் என்றால் உடம்பில் உள்ள உறுப்புகள் என்று உடனே தெரிகிறது. அவைகளுக்கு வடிவம் உண்டு. பருமன் உண்டு. ஆதலால் அவைகளை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மனம் என்பது எது? அதற்கு வடிவம் உண்டா? பருமன் உண்டா? தொட்டுப் பார்த்து அறிந்துகொள்ள முடியுமா? இவ்வாறு எண்ணிப் பார்த்தால் ஒன்றும் விளங்குவதில்லை. இவ்வாறு எண்ணுவதற்கு அந்த மனமே காரணமாக இருக்கிறதென்று தோன்றுகிறது. ஆனால் அது என்ன என்று மட்டும் எளிதில் அறிந்துகொள்ள முடிகிறதில்லை. மனத்திற்கு உருவமில்லை; கன பரிமாணமும் இல்லை. மனம் என்பது தசை, நரம்பு முதலியவைகளால் ஆக்கப்பட்டதன்று. அது சடப் பொருள் அன்று; அது சூக்குமப் பொருள், சடப் பொருள் என்றால் அது உடம்பைச் சேர்ந்த ஒர் உறுப்பாகிவிடும்; எளிதாக அதை அறிந்துகொள்ளவும் முடியும். சிலர் மூளைதான் மனம் என்று தவறாகக் கருதுகிறார்கள். மூளை என்பது உடம்போடு சேர்ந்த ஒரு பருப்பொருளான உறுப்பு. அது மனம் அல்ல. சூக்குமப் பொருளாக மனம் இருக்கிறதென்று மட்டும் நமக்குப் புலனாகிறது. அந்த மனந்தான் ஆசைகள், எண்ணங்கள், நோக்கங்கள், நம்பிக்கைகள் முதலியவற்றிற்கு இடமாயிரு

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி

ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெ