Skip to main content

கடைசி நோய் | சாந்திகுமார் மொரார்ஜி

ஆகாகான் சிறையில் கஸ்தூர்பா நோய்வாய்ப்பட்டபோது அவருக்கு வேண்டிய மருந்து, டாக்டர்வைத்தியர் முதலியோரைச் சந்திக்கவோ சிறையினுள் போய்ப் பார்க்க அனுப்பவோ வேண்டிய பொறுப்பு பர்ணகுடிப் பிரேமலீலா பஹனையும் என்னையும் சேர்ந்திருந்தது. நான் பர்ணகுடியில் அத்தை பிரேமலீலா பஹனுடனேயே தங்கி எல்லா ஏற்பாடுகளுக்கும் உதவி புரிந்துவந்தேன்.
டாக்டர் ஸுசீலாவும் டாக்டர் கில்டரும் ஆகாகான் சிறையில் கூடவே இருந்துவந்தார்கள். ஸர்க்கார் டாக்டர்களும் இருந்தார்கள். டாக்டர் மருந்துகளால் குணம் காணவில்லை என்றதும் நாட்டு வைத்தியம் பார்க்கத் தீர்மானித்தார்கள். டாக்டர் கில்டருக்கும் ஸுசீலா நய்யாருக்கும் நாட்டு வைத்தியத்தில் நம்பிக்கை கிடையாது. கடைசியில் வேறு வழியில்லாமல் அவர்களும் ஒப்புக்கொண்டார்கள்.
இதற்குப் பிறகு ஆயுர்வேதத்தில் பிரசித்திபெற்ற சிவசர்மா வைத்தியர் அழைக்கப்பட்டார். அவர் வந்து கஸ்தூர்பாவைப் பரிசோதித்துப் பார்த்து மருந்து கொடுக்கத் தொடங்கினார். அவர் பர்ணகுடியில் தங்கிப் புனா நகரத்திலுள்ள வைத்தியர்களிடமிருந்து தினமும் மருந்துபச்சிலைகள்மூலிகைகள் வரவழைத்து மருந்து தயார் செய்து கொண்டுவந்து கொடுப்பார்.
கஸ்தூர்பாவின் நோய் முற்றிப்போயிருந்ததால் பல தடவை அவரால் தாங்கமுடியாதபடி கஷ்டம் ஏற்படும். அப்போது வைத்தியருக்கு இரவிலும் வீடு போக மனம் வராது. இரவிலும் வைத்தியர் சிறையினுள் தங்க அனுமதி கொடுக்க வேண்டுமாகத் தேவதாஸ் பாயும் ராம்தாஸ் பாயும் ஸர்க்காருக்கு விண்ணப்பம் செய்தும் மன்றாடிக் கேட்டுக்கொண்டும் மறுப்பைத் தெரிவித்தும் எந்த முயற்சியும் பலிக்கவில்லை. ஆதலால் வைத்தியர் பல தடவை இரவில் ஆகாகான் சிறைவாசலுக்கு வெளியே மோட்டார் வண்டியிலேயே தூங்கியிருக்கிறார்.
ஒருநாள் இரவு பாவின் உடல்நிலை மிகவும் சீர்குலைந்துவிட்டது. அப்போது சிறை அதிகாரி ஸ்ரீ கடேலி வெளியே வந்து வண்டியில் தூங்கிக்கொண்டிருந்த சிவசர்மா அவர்களை எழுப்பி உள்ளே அழைத்துச் சென்றார். சில நாட்களுக்குப் பிறகு இவருடைய மருந்தும் நோயைக் கண்டிக்காததால் அவர் திரும்பிப் போய்விட்டார்.

***
கஸ்தூர்பாவின் புதல்வர்களில் முதல்வரான ஹரிலால் பாயின் வரலாறு யாவரும் அறிந்ததே. ஆகாகான் சிறையில் தங்கிவந்தபோது இறுதி நோய்க்கு நடுவில் கஸ்தூர்பாவுக்கு ஹரிலாலைப் பார்க்க வேண்டும் என்ற தீவிர விருப்பம் உண்டாயிற்று. தினமும் இதுபற்றி ராம்தாஸ் பாயிதேவதாஸ் பாயி முதலியவர்களிடம் சொல்லிவந்தார். அவர்கள் வெளியே வந்து என்னையும்ஸ்வாமி ஆனந்தையும் ஹரிலால் பாயை எப்படியேனும் தேடிக்கொண்டு வரும்படி சொல்லிச் செல்லுவார்கள்.
கடைசியில் ஸ்வாமி ஆனந்த் பம்பாயில் ஏதோ ஒரு சந்தில் அவர் அகப்பட்டதாகத் தேடிக் கொண்டுவந்து சேர்த்தார். இரண்டு தினம் கஸ்தூர்பாவை அவர் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார்.

***
கஸ்தூர்பாவின் நோய் முற்றிக்கொண்டு வந்தது. நானும் பிரேமலீலா அத்தையும் சிறைத் தலைமை அதிகாரி அங்கு வரும்போதெல்லாம் அவரிடம் கஸ்தூர்பாவைப் பார்க்க அனுமதிக்கும்படி வேண்டிக்கொண்டிருந்தோம்.
மிக மிக சீர்கெட்டுப் போகும்போது அனுமதி கொடுக்கப்படும்” என்றார் அவர்.
கடைசி தருணத்தில் அவர் மெய்ம்மறந்து கிடக்கும் பொழுது அனுமதிப்பதால் என்ன பயன்?” என்றோம்.
கடைசி நிமிஷம் வரை எங்களை அனுமதிக்கவே இல்லை! தில்லியைக் கேட்காமல் ஆகாகான் சிறையிலுள்ள மரத்து இலைகூட அசைய முடியாது.

***
டாக்டர்கள் பென்ஸிலின் கொடுப்பதாக யோசனை செய்தார்கள். அப்போதுதான் அது புதிதாக வெளிவந்திருந்தது. அமெரிக்க ராணுவத்தில் உள்ளவர்களுக்காக அது தில்லியில் வைக்கப்பட்டுவந்தது. அதை ஆகாய விமானத்தில் வரவழைத்தார்கள்.
தேவதாஸ் பாயி, “கொடுப்போம்” என்றார். காந்திஜி அதைக் கொடுக்க விரும்பவில்லை.
பாவை ஏன் அநாவசியமாகக் கஷ்டத்திற்கு ஆளாக்க வேண்டும்சும்மாப் படுத்துக் களைப்பாறட்டும்” என்று கூறிவிட்டார். கடைசி வரை அது கொடுக்கப்படவில்லை.
சிவராத்திரி அன்று மாலை கஸ்தூர்பாவின் சடலத்தை விட்டு ஆவி பிரிந்தது!

***
இறுதியாக, கஸ்தூர்பா இறந்த பிறகு பிரேம்லீலா அத்தைக்கும் எனக்கும் சிறைக்குள் போக அனுமதி கிடைத்தது.
நாங்கள் போய்ச் சேர்ந்தபோது கஸ்தூர்பாவைக் குளிப்பாட்டி வளையல் அணிவித்துபொட்டிட்டுப் பூமாலை சாத்திப் படுக்க வைத்திருந்தார்கள். காந்திஜி ஒரு பக்கம் வீற்றிருந்தார். கீதாபாராயணம் நடந்துவந்தது.
பாபுஜி கையால் நூற்று நெய்யப்பட்ட புடவையையே எனக்கு அணிவிக்க வேண்டும் என்ற பாவின் விருப்பப்படி அணிவித்திருந்தார்கள். கங்கைத் தீர்த்தத்தையும் துளஸி மாலையையும் முன்னமேயே பிரேமலீலா அத்தை அனுப்பியிருந்தாள்.

***
மறுநாள் காலையில் ஆகாகான் மாளிகை எல்லைக்குள் மஹாதேவ்பாயின் இறுதிச்சடங்கு நடந்த இடத்திற்குப் பக்கத்திலேயே சடலத்திற்குத் தீ இடப்பட்டது. காலையில் சிறைக்குள் வருவதற்கு நூறு பேர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இச்செய்தியை அதிகார வர்க்கத்தினர் நகரத்தில் வெளியிட்டிருந்தார்கள். அதனால் ஸ்ரீ கர்வேஸீனியர் ரேங்க்ளர் பராஞ்ஜபேஇந்திய ஊழிய ஸங்கத்தினர். கேஸரி பத்திரிகைக் காரியாலயத்தார் முதலியோர் - முக்கியமாக காந்திஜியுடன் அரசியலில் கொள்கை வேறுபாடு உள்ளவர்களே - அதிகமாக வந்திருந்தனர்.

***
சிதை அடுக்குவதற்காக விறகுக் கட்டையைத் தவிர ஸர்க்கார் மூலமாகச் சந்தனக்கட்டையும் நெய் முதலியனவும் வந்திருந்தன. சிதையைப் புனாவாசிகளே அடுக்கியிருந்தார்கள். பிணம் சீக்கிரம் எரியமுடியாதபடி சிதை எப்படியோ அடுக்கப்பட்டிருந்தது. இவ்விஷயத்தில் எனக்கு அதிக அநுபவமுண்டு. ஆகையால் நான் அதைப் பற்றிப் புனாவாசிகளிடம் எச்சரிக்கை செய்தேன். ஆனால் அவர்கள் நான் சொன்னதற்குச் செவிசாய்க்கவே இல்லை.
இது எங்கள் புனா முறை” என்றார்கள்.
நான் பிறகு ஒன்றும் பேசவே இல்லை.
10 மணிக்கு இந்தப் புனாவாசி பிராம்மணர் மூலம் இறுதிச்சடங்கு நடந்தேறியது. தேவதாஸ் பாயிதான் கொள்ளி வைத்தார். ஒரு மூங்கிலைப் பிளந்து ஒரு குழாய் செய்துமந்திர கோஷடத்துடன் அதன் வழியாக நெய்யைத் தாரையாக வாயில் விட்ட பிறகுதான் சிதை எரியத் தொடங்கியது.
பன்னிரண்டு மணி ஆகிவிட்டது. ராமதாஸ்பாயின் வரவை எதிர்பார்த்திருந்தும் அவர் வந்துசேரவில்லை. இங்கே பாவின் சடலத்தின் மீது நெய் ஏராளமாக விடப்பட்ட பிறகும் இரண்டு மணி அடித்தும் அது எரியவில்லை. அங்கே தில்லியில் ஸர்க்கார் உயர்தர அதிகாரிகள் டெலிபோன் மூலம் செய்தியை எதிர்பார்த்து நின்றனர். தந்தியும் பறந்தது.
ஆனாலும் கஸ்தூர்பாவின் சடலம் எரிந்தபாடில்லை.
காந்திஜி பக்கத்திலிருந்த மரத்தின் கீழே நாற்காலியில் உட்கார்ந்திருந்தார். எல்லோரும் அவரை,
தயவு செய்து இனி உள்ளே செல்லுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார்கள்.
ஆயுள் முழுவதும் கூடவே இருந்து இப்பொழுதா அரைமணி நேரத்திற்காக விட்டுப் போகவேண்டும்?” என்றார் அவர்.
எல்லோரும் பேசாமல் இருந்துவிட்டனர்.
ஆனால் இன்னும் கஸ்தூர்பா சடலம் சரியாக எரியவே இல்லை!
கடைசியில் நான்,
என்னிடம் ஒப்பியுங்கள்” என்றேன்.
சரிஒப்பித்தோம்” என்றனர்.
கன்யா, பொங்கல்சிதை இம்மூன்றையும் திருப்பவோ அசைக்கவோ கூடாது என்றார்கள். நான் சிதையை மேல் கீழாகக் குலுக்கினேன். உடனே நெருப்பு ஒளிவிட்டு எரியத் தொடங்கியது.
காந்திஜி,
தேவதாஸ்குடும்பியாயிருந்தும் சிதையை அவனுக்கு எரியவிடத் தெரியவில்லை! உங்களுக்கு இது எப்படித் தெரிந்தது?” என்றார்.
என் பாட்டி அம்மா என்னை முதலிலிருந்தே இறந்த வீடுகளுக்கும் சுடுகாட்டிற்கும் போகும்படி பழக்கப்படுத்தி இருந்தார்கள். உற்றார் உறவினர் இறந்தால் அவர்கள் வீட்டிற்குத் தப்பாமல் என்னை அனுப்புவார்கள். கடைசி வரை ஸ்மசானத்தில் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆதலால் சீக்கிரம் எரியவிடக் கற்றுக்கொள்ள வேண்டும். அதை நான் சரியாகக் கற்றுக்கொண்டேன். எங்கும் இந்த வேலையை நான் ஏற்றுக்கொண்டதால் இதில் தேர்ச்சி அடைந்திருக்கிறேன்.” என்றேன்.
மூன்று மணிக்குச் சிதை எரிந்து தணிந்தது. அதே சமயம் ராம்தாஸ் பாயும் வந்துசேர்ந்தார்!
பிறகு எல்லோரையும் சிறைக்கு வெளியே கிளப்பினார்கள்.

***
மறுநாள் ஆகாகான் சிறைக்குள் காந்தி குடும்பத்தினர் மாத்திரமே அனுமதிக்கப் பெற்றார்கள். அஸ்தி ஸஞ்சயம்-எலும்புகளைப் பொறுக்கி எடுத்துவைக்கும்போது- சாம்பலிலிருந்து கஸ்தூர்பா அணிந்திருந்த நான்கு வளையல்கள் மாத்திரம் அப்படியே முழுதாகக் கிடைத்தன. எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். இவ் வளையல்கள் நெருப்பில் எரியா (Fire Proof) வளையல்கள் என்றார்கள் சிலர். ஆனால் பாவின் வளையல்களைச் சேர்ந்தவற்றையே மனு பேனும் அணிந்திருந்தார். அவர் அதை நெருப்பில் போட்டதில் அவை உடனே பஸ்மாகிவிட்டன!
பதிபக்தி பராயண ஸௌபாக்கியவாதிகளான ஸ்திரீகளுடைய வளையல்கள் தீக்கு இரை ஆகா என்று இன்றும் கருதப்படுகிறது.

(சாந்திகுமார் மொரார்ஜி குஜராத்தியில் எழுதி, ஹரிஹர சர்மாவால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, கலைமகள் காரியாலயம் வெளியிட்ட, 'காந்திஜியின் நினைவுகள்' என்ற நூலிலிருந்து)

தொடர்புடைய பதிவு:

மகாத்மா போற்றிய வளையல்கள் | எஸ். வி. ராமகிருஷ்ணன்

Comments

Most Popular

மணிபல்லவம் - ஜம்பு கொல பட்டினம் - மயிலை சீனி. வேங்கடசாமி

சங்ககாலத்து நூலாகிய மணிமேகலையிலே, இலங்கைத் தீவின் வடகோடியில் இருந்த மணிபல்லவம் என்னும் துறைமுகப்பட்டினம் கூறப்படுகிறது. பாலி மொழியில் எழுதப் பட்டுள்ள பழைய பௌத்த நூல்களிலேயும் இலங்கைத்தீவின் வடகோடியில் இருந்த ஜம்புகோல் என்னும் துறைமுகப் பட்டினம் கூறப்படுகிறது. தமிழ் நூலில் கூறப்படும் குறிப்பு களைக் கொண்டும் பாலி மொழி நூல்களில் கூறப்படும் குறிப்புகளைக் கொண்டும் மணிபல்லவமும் ஜம்புகொல பட்டினமும் ஒரே இடம் என்று துணியலாம். பெயர் வேறுபடு வதிலிருந்து இரண்டும் வெவ்வேறிடங்கள் எனக் கருதும்படி இருந்தாலும், இவைகளைப்பற்றிக் கூறப்படும் செய்திகளை உற்றுநோக்கினால், இரண்டும் ஒன்றே என்பது ஐயமற விளங்குகிறது. இதனை ஈண்டு ஆராய்வோம். இலங்கைத் தீவின் வடபகுதி பல சிறு தீவுகளைக் கொண்டது. இத்தீவுகள் ஒன்றிலேதான் மணிபல்லவம் அல்லது ஜம்புகோல் பட்டினம் இருந்தது. "தென்றிசை மருங்கிலோர் தீவு' (மணி. 9-வது காதை), 'மணிபல்லவம் என்னும் தீவகம்" (மணி. 21- ஆம் காதை) என்று மணிமேகலை கூறுவது காண்க. சோழ நாட்டின் துறைமுகப்பட்டினமாகிய புகார்ப்பட்டினத்தில் இருந்து தெற்கே 30 யோசனை தொலைவில் மணிபல்லவம் இருந்தது (

உறையூர் மறைந்த வரலாறு - மயிலை சீனி. வேங்கடசாமி

ஊர்களும் நகரங்களும் சிற்சில காரணங்களால் அழிந்து படுவதுண்டு. எரிமலைகளாலும், ஆறுகளாலும், மண்காற்றி னாலும், கடற்பெருக்காலும் ஊர்கள் அழிகின்றன. இவ்வாறு அழிந்துபோன ஊர்கள் பலப்பல. கி.பி. முதலாம் நூற்றாண்டிலே கிரேக்க நாட்டிலே இருந்த பாம்பி என்னும் நகரம், வெசூவியஸ் என்னும் எரிமலை கக்கிய நெருப்பினாலும் சாம்பலினாலும் மூடுண்டு அழிந்துவிட்டது. அழிந்துபோன அந்நகரத்தைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் தோண்டியபோது, புதையுண்ட வீதிகளையும், மனைகளையும், மக்களின் எலும்புக் கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். சிந்து நதிக்கரையிலே இருந்த ஹரப்பா, மொகஞ்சதரோ என்னும் நகரங்கள் வெள்ளப் பெருக்கினால் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அழிந்துவிட்டன. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவ்விடங்களை அகழ்ந்து பார்த்தபோது, அக் காலத்துக் கட்டடங்களையும், தெருக்களையும், பாண்டங் களையும், எலும்புக்கூடுகளையும், ஏனைய பொருள்களையும் கண்டெடுத்தனர். புதுச்சேரிக்குத் தெற்கே பத்து மைல் தொலைவில் உள்ள அரிக்கமேடு என்னும் கடற்கரைப் பட்டினம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்த் தமிழ் நாட்டில் பேர்பெற்ற துறைமுகமாக இருந்தது. யவனர் முதலிய வெ

குலாப்ஜான் காதல் | புதுமைப்பித்தன்

‘ காதலாவது உருளைக்கிழங்காவது ’ - சி . சுப்பிரமணிய பாரதி நான் ஆராய்ச்சிப் பிரியன் . அதிலும் தர்க்கரீதியாக புத்தியை வசீகரிக்கக்கூடிய ஆராய்ச்சியென்றால் , அதுதான் எனது தெய்வம் . கம்பனுடைய காவியங்கள் முதல் , நாணயச் செலாவணி , தீண்டாதார் ஆலயப் பிரவேசம் ஈறாக , எல்லாம் தர்க்க முறையில் அடைபட்டு ஒத்து இருந்தால்தான் எனது கொள்கை . இல்லாவிடில் அதற்கும் நமக்கும் வெகுதூரம் . இந்தக் காதல் விஷயத்தை நன்றாக ஆராய்ந்து கவனித்ததில் , சாதாரணமாக அல்ல , அபரிமிதமாக , காவியங்கள் , நாவல்கள் என்ற கற்பனைப் பிரதேசங்களில்தான் விளைகின்றன . இல்லாவிட்டால் அவை நமது பொருள்காட்சி சாலைகளைத் தப்பி இருக்க முடியுமா ? அகப்பொருள் இலக்கணக்காரர் கூறுவதைப் பார்த்தால் அசல் , கலப்பில்லாத பழம் பெருந்தமிழ் மக்களுடனிருந்து அவர்கள் தங்களுடைய ஏடுகளுடன் கடலால் கொள்ளப்பட்ட பொழுது , அவர்களுடன் சங்கமமாயிற்றென்று நினைக்க ஏதுவிருக்கிறது . ஆழ்ந்து யோசிக்குந்தோறும் , தர்க்க ஆராய்ச்சியை வழிபடும் எனக்கு , அதன் கூற்றுக்கள் வெகு வினோதமாகவே காணப்படுகின்றன . எனது ஆர